ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது?
நான்கு ஆறு மாதம் முடியும் வரை தாய்பால் மட்டுமே உணவு, தண்ணீர் கூட தேவையில்லை.அதன் பிறகு தாய்பாலின் அளவு குழந்தையின் எடைக்கு போதுமான அளவு இருப்பதில்லை, எனவே இணை உணவு ஆரம்பிப்பது அவசியம். இந்த நேரத்தில் இணை உணவு ஆரம்பிக்காவிடில் குழந்தையின் எடை சரியாக அதிகரிக்காது. அரிசி கஞ்சி, பருப்பு தண்ணீர், காய்கறி சூப் போன்றவற்றை ஒவ்வொன்றாக ஆரம்பிக்கலாம். முதலில் ஆரம்பிக்கும்போது காலை நேரத்தில் கொடுப்பது நல்லது. வாரத்திற்கு ஒரு புதிய உணவு வீதம் சேர்த்து கொள்ளலாம். முதல் உணவு எந்தவித சுவையும் இல்லாமல் bland ஆக இருப்பது நல்லது முதலில் குழந்தைகள் உணவை துப்பும், தொடர்ந்து தினமும் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் அந்த உணவை உண்ண பழகி கொள்ளும். வலுக்கட்டாயமாக உணவை திணிக்க கூடாது. விளையாட்டு காண்பித்து கொண்டே கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஒருவயது ஆன பின்பு குழந்தை தானாக எடுத்து உண்ண ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தையை தானாக உண்ணும்படி ஊக்குவிக்க வேண்டும்.
6 -8 மாதம்: அரிசி கஞ்சி, கோதுமை கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, வாழைபழம், வேகவைத்து மசித்த உருளை கிழங்கு, இட்லி, வேக வைத்து மசித்த காய் கறிகள், பருப்பு சாதம்,கீரை சாதம், பிஸ்கட்
9 - 10 மாதம்: முட்டை - மஞ்சள் கரு அதன் பின் வெள்ளை கரு, உப்புமா, பாயாசம், ஊறவைத்த சப்பாத்தி, வேகவைத்து மசித்த நிலகடலை,கொண்டைகடலை, பட்டாணி.
11 - 12 மாதம்: non-veg சூப், ஈரல், வேகவைத்து மசித்த மாமிசம், மீன்
ஒருவயது குழந்தை வீட்டில் தயாரிக்கும் எல்லா உணவுகளையும் உண்ணலாம். கடினமான நன்கு மென்று சாப்பிடவேண்டிய உணவு பொருட்களை தவிர்க்கவும், உதாரணமாக நிலகடலை சுண்டல் பட்டாணி போன்றவை மூச்சு குழாயில் செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே இது போன்ற உணவுபொருட்களை நன்றாக மசித்து கொடுப்பது நல்லது. இரண்டு வயதுக்கு பிறகு குழந்தை நன்றாக மென்று தின்ன பழகும் வரை மசித்து கொடுப்பதே நல்லது